சென்னை : வேலூர் விமான நிலையம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என ஒன்றிய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். வேலூரில் நடைபெற்ற பாஜக அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்கக் கருத்தரங்கில், ஒன்றிய இணை அமைச்சர் வி.கே.சிங் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உதான் திட்டத்தின் கீழ் வேலூருக்கு விமான சேவை வழங்க பல்வேறு விமான நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
அந்த பேச்சுவார்த்தைகளில் இழுபறி நீடித்தாலும் கல்வி, மருத்துவ தேவைகளில் சிறந்து விளங்கும் வேலூருக்கு விமான சேவையை கொண்டு வர ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய வி.கே.சிங், தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பயணிக்கும் தொலைவிற்கு ஏற்ப சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறை விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளதாக தெரிவித்தார். ஜிபிஆர்எஸ் தொழில்நுட்பம் மூலம் செயற்கைகோள் உதவியுடன் வாகனங்களை படம் எடுத்து சுங்கக்கட்டணம் வசூலிக்க வழிவகை செய்யப்படும் என அவர் கூறினார். காலாவதியான சுங்கச்சாவடிகள் அகற்றப்படுமா என்ற கேள்விக்கு புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வி.கே.சிங் தெரிவித்தார்.