சென்னையில் மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தை நீட்டிப்பது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை இந்த மாத இறுதியில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் 55 கிலோ மீட்டர் தொலைவிற்கு முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்த வழித்தடங்களில் 52 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பெருகிவரும் மக்கள்தொகை காரணமாக போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை வழங்கும் பணிகள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3வது வழித்தடமான 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி வரையிலும், 4வது வழித்தடமான 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடமான 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில்ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை 2026ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வழித்தடங்களை மேலும் நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்தது.
இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில், ‘‘கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை அமைக்கப்படும் 4வது வழித்தடத்தை பரந்தூர் வரை 50 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் முதல் சோழிங்நல்லூர் வரை 5வது வழித்தடத்தில் திருமங்கலத்தில் இருந்து முகப்பேர், அம்பத்தூர் வழியாக ஆவடி வரை 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு நீட்டிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 3வது வழித்தடத்தில் சிறுசேரி முதல் கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு தொடர்பாக சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி 3 நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தமாகியது. இந்த நிறுவனங்கள் சாத்தியக்கூறு ஆய்வு பணியை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின் படி நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணம், 30 ஆண்டுகளுக்கு இந்த வழித்தடங்களில் பயண தேவை, அவற்றை கட்டுவதற்கான மதிப்பீட்டு செலவு, தேவைப்படும் பொது மற்றும் தனியார் நிதி, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்கின்றனர். கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்நிறுவனங்கள் இம்மாதம் இறுதியில் ஆய்வு பணிகளை முடித்து மெட்ரோ நிறுவனத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.