சென்னை: மதிமுக பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட வைகோ உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மதிமுகவின் 5வது அமைப்பு தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில், மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோன்று முதன்மை செயலாளர் பொறுப்புக்கு துரை வைகோ உள்பட முக்கிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ், பொருளாளர் செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி மணி, ஆடுதுறை முருகன், இராசேந்திரன், டாக்டர் ரொஹையா சேக்முகமது ஆகியோர் நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியின் போது, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மதிமுக மாவட்ட செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், ப.சுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:
#முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து