நாகப்பட்டினம்: ‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களான பாஜவை ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும்’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட திமுக சார்பில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இஜிஎஸ் பிள்ளை கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தேர்தல் காலங்களில் ஐடியை ஏவி ரெய்டு நடத்துகிறார்கள். இந்த மிரட்டல் திமுக ஆட்சியில் மட்டும் இல்லை, கடந்த அதிமுக ஆட்சியிலும் நடந்துள்ளது. சோதனை என்ற பெயரில் அதிமுகவினரை மிரட்டி அடிபணிய வைத்தனர். அது போல் திமுகவை ஒன்றிய அரசு நினைக்கிறது. ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு அடிபணிய நாங்கள் ஒன்றும் எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ இல்லை. நாங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை மறந்து விடக்கூடாது. ஒன்றிய பாஜ அரசை விரட்டியடிப்பதை கலைஞர் நூற்றாண்டு விழாவின் பரிசாக நாம் முதல்வருக்கு கொடுக்க வேண்டும். கடந்த சட்டசபை தேர்தலில் பாஜவின் அடிமையான அதிமுகவை ஓட ஓட விரட்டியடித்தீர்கள். அது போல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களான பாஜவையும் ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
Tags:
#உதயநிதி ஸ்டாலின்