சென்னை: இந்தியாவின் ஜனநாயகத்தை, மக்களாட்சியை, மதச்சார்பின்மையை, பன்முகத்தன்மையை, ஒடுக்கப்பட்ட மக்களை, ஏழை எளிய மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் பாஜ மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் மிகத்தெளிவாக இருக்கிறோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். பீகார் மாநிலம், பாட்னாவில் நடைபெற்ற மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக பல்வேறு கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக நானும் பொருளாளர் டி.ஆர்.பாலுவும் சென்றிருந்தோம். மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் உருவாக்குவதாக இந்தக் கூட்டம் அமைந்திருந்தது. பாட்னா சென்றவுடன் லாலு பிரசாத் யாதவ் இல்லத்திற்கு சென்று, அவருடைய உடல்நிலை விசாரித்து, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அது எனக்கு பெரிய உற்சாகத்தை தந்தது. ஒன்றிய அளவில் ஆட்சியில் இருக்கும் பாஜ ஆட்சியை வீழ்த்துவது என்பதை நோக்கமாகக் கொண்டதாக இந்தக் கூட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூட்டியிருந்தார்.
இந்தியாவின் ஜனநாயகத்தை – மக்களாட்சியை – மதச்சார்பின்மையை – பன்முகத்தன்மையை – ஒடுக்கப்பட்ட மக்களை – ஏழை எளிய மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் பாஜ மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் மிகத்தெளிவாக இருக்கிறோம். இதில் கடைசி வரை உறுதியாக இருக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு சொன்னேன். 2023 ஜூன் 23ம் தேதி கூடினார்கள், 2024 மே மாதம் வெற்றி பெற்றார்கள் என்பது மட்டும்தான் வரலாற்றில் பதிவாக வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் அழுத்தம் திருத்தமாக பேசினேன். எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்தக் கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்.
கூட்டணியாக அமைக்க முடியவில்லை என்றால் தொகுதிப் பங்கீடுகளை மட்டும் செய்து கொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்றால் பொதுவேட்பாளர் அறிவித்துக் கொள்ளலாம், தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது. அரசியல் கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும். இதுபோன்று எழும் பிரச்னைகளைச் சரிசெய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று வரிசையாக அந்தக் கூட்டத்திலே பேசுகின்ற போது வலியுறுத்தி சொல்லி இருக்கிறேன்.
கூட்டம் முடிந்த பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. நீங்களும், ஆம் ஆத்மி கட்சியும் கலந்து கொள்ளவில்லை. அதில் ஏதாவது காரணம் இருக்கிறதா? நன்றி சொல்லி முடிக்கும் வரை நான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதற்குப் பிறகு எனக்கு விமான நிலையம் செல்ல நேரமாகி விட்டது. மதிய உணவுக்கு பிறகுதான் பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்திருந்தார்கள். அதனால் மதிய உணவு கூட சாப்பிட முடியாமல், விமானத்தில் தான் சாப்பிட்டேன். அவர்களிடம் சொல்லி விட்டு தான் வந்தேன். வேறு எந்த காரணமும் இல்லை. அதுதான் உண்மை, ஆம்ஆத்மி கட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். டெல்லி அவசர சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி அவர்களது நிலைப்பாடு குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. நீங்கள் அது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
இரண்டாம் கட்ட கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என்று கூறியிருக்கிறார்கள். முதற்கட்ட கூட்டத்தில் முழுமையாக எதுவும் எட்டப்படவில்லையா? எதற்காக இரண்டாவது கூட்டம்? முதல் கூட்டத்தில் கூடினோம், என்ன செய்வது என்பது பற்றி முடிவு செய்திருக்கிறோம். போகப்போக அடுத்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறோம் என்பதை தெரிவிக்கிறோம். பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து..? அது இன்னும் முடிவு செய்யவில்லை. நீங்கள் எல்லோரும் ஆர்வமாக இருப்பதைப் பார்த்தால் பிரதமர் வேட்பாளர் யார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்
.
Tags:
#மு.க. ஸ்டாலின்