மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை தலைமை செயலர் ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை தலைமை செயலர் ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு
By: TeamParivu Posted On: July 10, 2023 View: 64

சென்னை, ஜூலை 10: சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், பாதாள சாக்கடை உள்ளிட்ட திட்ட பணிகளை தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், வார்டு-156, முகலிவாக்கம், சபரி நகர் மற்றும் மதனந்தபுரம் பகுதிகளில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.99.71 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, இந்த பணிகளின் மூலம் 39,000 நபர்கள் பயனடைவார்கள். பருவமழைக்கு முன்னதாக பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், பணிகள் மேற்கொள்ளும் இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், பணிகள் முடிக்க முடிக்க அந்த பகுதிகளில் தரமான சாலைகளை நெடுஞ்சாலைத் துறையினர் உடனுக்குடன் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, லலிதா நகர் 2வது தெருவில் சென்னை மாநகராட்சி சார்பில் வெள்ள தடுப்பு நிவாரண நிதியின் கீழ், ரூ.3.49 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர், வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட போரூர் சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ராமாபுரம், திருவள்ளூர் சாலையில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் வெள்ளத் தடுப்பு நிவாரண நிதியின் கீழ் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 2960 மீ. நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவற்றில் 1706 மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1254 மீ. நீளமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலைத் துறையுடன் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியமும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், பணிகள் முடிக்க முடிக்க அந்த பகுதிகளில் தரமான சாலைகளை நெடுஞ்சாலைத் துறையினர் உடனுக்குடன் அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். ஆய்வு செய்யப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை விரைந்து முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:
#தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..