சென்னை, ஜூலை 13: சைதாப்பேட்டை, எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில், ரூ.44.50 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதி கட்டும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை சைதாப்பேட்டை, எம்.சி. ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில், 20202-2023ம் ஆண்டிற்கான நிநிநிலை அறிக்கையில் சுமார் 1,01,101 சதுர அடி பரப்பளவில் 10 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதிக் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கிணங்க, சென்னையில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல், தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் துறைகளில் பயின்று வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. எனவே, மாணவர்களின் தங்குமிடத் தேவையை பூர்த்தி செய்யவும், அவர்களது திறனை மேம்படுத்தவும் எம்.சி.ராஜா விடுதி வளாகத்தில் புதியதாக மொத்தம் 1,01,101 சதுர அடி பரப்பளவில் 484 மாணவர்கள் தங்குமளவிற்கு தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் கூடிய 121 தங்கும் அறைகள், நூலகம், உடற்பயிற்சிக்கூடம், பார்வையாளர் அறை, பன்னோக்கு அரங்கம் ஆகிய நவீன வசதிகளுடன் 44 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விடுதிக் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில், காலியாகவுள்ள இடத்தில் 10 தளங்களுடன் ரூ.44 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் மாணவர் விடுதிக் கட்டிடத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி, முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் 15.12.1961ல் திறந்து வைக்கப்பட்டது. இதுவரையில் சுமார் 25,000 மாணவர்கள் அந்த விடுதியில் தங்கி பட்டம் பெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், கயல்விழி செல்வராஜ், சென்னை மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, துணை மேயர் மகேஷ் குமார், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் சந்தர மோகன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக தலைவர் மதிவாணன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், சென்னை கலெக்டர் அருணா, பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.