தமிழ்நாட்டில் பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக ஜவுளி தொழிலில் உள்ள பாதிப்புகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக ஜவுளி தொழிலில் உள்ள பாதிப்புகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
By: TeamParivu Posted On: July 20, 2023 View: 53

சென்னை: தமிழ்நாட்டில் பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக ஜவுளி தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்கும் வகையில், இறக்குமதி வரி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதம்: தமிழ்நாட்டில் நூற்பாலை தொழிலில் 15 லட்சம் தொழிலாளர்களை கொண்டு 1,500 நூற்பாலைகள் இயங்கி வருகிறது. இவை தமிழ்நாட்டின் தொழில் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. பருத்தி விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான விலை உயர்வு, வங்கி வட்டி உள்ளிட்ட செயல்பாட்டு செலவு அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தைகளில், தேவையில் ஏற்பட்டுள்ள சரிவு போன்றவை நூற்பாலை சங்கம் கடந்த 15ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தத்தை அறிவிக்கும் அளவுக்கு, இத்துறை ஒரு கடுமையான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை புதுப்பிக்கவும், மறுசீரமைக்கவும் ஒன்றிய அரசு அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் குறுகிய கால கடன்களை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெற்ற கடனை திருப்பி செலுத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளதால், நூற்பாலைகளுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதோடு, உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் பருத்தி இறக்குமதிக்கு ஒன்றிய அரசால் விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரி, இந்தியாவிற்கும், சர்வதேச அளவிலான போட்டியாளர்களுக்கும் இடையிலான மற்றொரு குறிப்பிடத்தக்க விலை வேறுபாடு ஆகும்.
இதுதொடர்பாக தனது 16-5-2022 நாளிட்ட முந்தைய கடிதத்தில், நூற்பாலைகள் பருத்தி கொள்முதல் செய்வதற்கான ரொக்க கடன் வரம்பை மூன்று மாதங்களில் இருந்து 8 மாதங்களாக நீட்டிக்கவும், வங்கிகள் கோரும் விளிம்பு தொகையை கொள்முதல் மதிப்பில் 25 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்கவும் கோரியிருந்தேன்.
ஜவுளி தொழிலை (நூற்பு முதல் துணிகள் வரை) பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும், அதனால் உருவாகும் வேலைவாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு, தனது முந்தைய வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இந்த சூழலில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கீழ் செயல்படும் நூற்பாலைகளின் அவல நிலையை போக்கிடவும், நூற்பாலை துறையில் மீண்டும் வேலைவாய்ப்பினை கொண்டுவரவும் உதவிடும் பொருட்டு, அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், உரிய நிதியுதவியினை நூற்பாலைகளுக்கு வழங்கிட வேண்டும். அந்நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தினை மேலும் ஓராண்டு நீட்டிக்கவும், ஏற்கெனவே பெற்ற கடனை 6 ஆண்டு கால கடனாக மாற்றி திருத்தியமைக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் புதிய கடன்கள் வழங்கி, இந்த கடன்களுக்கான வங்கி வட்டி விகிதங்களை குறைத்திட பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை திரும்ப பெற வேண்டும். அதன்மூலம் உற்பத்தி செலவை கணிசமாக குறைக்கலாம். மேலும், நாட்டின் நூல் உற்பத்தியில் குறுந்தொழில் நிறுவனங்களின் கீழ் வரும் கழிவு பஞ்சு நூற்பாலைகள் 35 சதவீதம் அளவிற்கு பங்களிக்கின்றன. குறைந்த விலை துணிகளில் பயன்படுத்தப்படும் இந்த கழிவு பருத்தி பற்றாக்குறையை சமாளிக்க, இந்தியாவில் இருந்து கழிவு பருத்தியை ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:
#முதல்வர் மு.க.ஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..