மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்க உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் அறிவிப்பு

மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்க உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் அறிவிப்பு
By: TeamParivu Posted On: August 04, 2023 View: 58

சென்னை: மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்க உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் அருணா அறிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் மு.அருணா வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மொத்த விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். இரு சக்கர வாகனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கியர்லெஸ், ஆட்டோ கியர் கூடிய இன்ஜின் 125 சிசி சக்திக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். வாகனம் வாங்குவதற்கான விலைப்புள்ளி இணைக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பம் செய்தால், 1. பேஷ் இமாம், 2.அரபி ஆசிரியர்கள், 3. மோதினார், 4. முஜாவர் என்ற முன்னுரிமையின் அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் உலமாக்கள், சென்னை-1, ராஜாஜி சாலையில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 6வது தளத்தில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:
#மானிய விலையில் இரு சக்கர வாகனம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..