அஸ்தியை பயன்படுத்தி ஓவியம் வரையும் கேரள கலைஞர்

அஸ்தியை பயன்படுத்தி ஓவியம் வரையும் கேரள கலைஞர்
By: TeamParivu Posted On: November 08, 2023 View: 35


சவுமியாவின் விருப்பத்தின்படி ஓவியம் வரைந்து கொடுக்க யாரும் முன்வரவில்லை.

சாஜனின் ஓவியத்தை ஓவியர் உன்னி வர்ணசாலா வரைந்து வருகிறார்.

திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் சாஜன். இவரது மனைவி சவுமியா. (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). வெவ்வேறு மதத்தை சேர்ந்த
இவர்கள் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சாஜன் ஹார்டுவேர் என்ஜினீயராகவும், சவுமியா வங்கி ஊழியராகவும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் சாஜனுக்கு மூளையில் பிரச்சனை
ஏற்பட்டது. அவரை காப்பாற்ற மனைவி பல விதங்களில் போராடினார். சாஜனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இருந்தபோதிலும் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். கணவரின் இறப்பு சவுமியாவை வெகுவாக பாதித்தது. கணவரின் மறைவால் அவர் மனம்
உடைந்தார். சவுமியா மற்றும் சாஜன் ஆகிய இருவரும் எந்த ஒரு மதத்தின் மீதும் விருப்பின்றி, எந்தவித மத நம்பிக்கைகளுக்கும் இடம் கொடுக்காமல் வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனால் தனது கணவரின் உடலை எரிக்க சவுமியா முடிவு செய்தார். அதன்படி சாஜனின் உடல் எரிக்கப்பட்டது. அவரது அஸ்தி மனைவி
சவுமியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை வழக்கம் போல் நீர்நிலையில் கரைக்க சவுமியா விரும்பவில்லை.

மாறாக கணவரின் அஸ்தியை ஏதாவது ஒரு ஓவிய கலைஞரிடம் கொடுத்து, அதனை பயன்படுத்தி ஓவியம் வரைந்து தன்னுடன் வைத்துக்கொள்ள முடிவு செய்தார். அதன்படி பல கலைஞர்களை அவர் சந்தித்திருக்கிறார்.

ஆனால் சவுமியாவின் விருப்பத்தின்படி யாரும் ஓவியம் வரைந்து கொடுக்க முன்வரவில்லை. இறுதியில் உன்னி வர்ணசாலா என்ற ஓவியக்கலைஞர், சவுமியாவின் விருப்பப்படி அவரது கணவரின் அஸ்தியை பயன்படுத்தி ஓவியம் வரைந்து கொடுக்க சம்மதித்தார்.

இதையடுத்து அவரிடம் தனது கணவரின் அஸ்தியை சவுமியா ஒப்படைத்தார். மேலும் தனது கணவரின் புகைப்படம் ஒன்றையும், ஓவிய
கலைஞரிடம் வழங்கினார். அதனை வைத்து சாஜனின் ஓவியத்தை ஓவியர் உன்னி வர்ணசாலா வரைந்து வருகிறார்.

இறந்தவரின் அஸ்தியை பயன்படுத்தி ஓவியம் வரைவது குறித்து அவர் கூறியதாவது:-
நான் இதற்கு முன்பு இதுபோன்று செய்ததில்லை. வாழ்க்கையில் இப்படியொரு வாய்ப்பு எனக்கு கிடைப்பது இதுவே முதல் முறையாகும். இது கடைசி முறையாகவும் இருக்கலாம். ஒரு கலைஞனாக இந்த பணி எனக்கு மிகவும் சவாலானது. தற்போது நான் ஓவியத்தை பற்றி மட்டுமே சிந்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..