சென்னை: தீபாவளி பண்டிகைக்கான தொடர் விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இன்று நவம்பர் 9 ஆம் தேதி முதல் வரும் 11 ஆம் தேதிவரை மாலை நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை நேரம் 10 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறைந்த தூர லூப் சர்வீஸ் வழித்தடத்தைத் தவிர மற்ற தடங்களுக்கு இந்த சேவை நேர நீட்டிப்பு பொருந்தும். தீபாவளிக்காக சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக இந்த நேர நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை வரும் 12-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. மறுநாள் 13-ம் தேதி கேதார கவுரி விரதம் என்பதால், அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பலதரப்பிலும் கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில், தீபாவளிக்காக சொந்த ஊர்செல்பவர்கள் ஊர் திரும்ப வசதியாக அரசு அலுவலகங்கள், பொதுத் துறைஅலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு 13-ம் தேதியும் அரசு விடுமுறை அளித்துள்ளது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை ஒட்டி சென்னை நகருக்குள் பல இடங்களுக்கும் பயணிகள் செல்ல ஏதுவாக மெட்ரோ ரயில் சேவை நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.