சென்னை: டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் பிராந்தியத் தலைவரும், சிறப்பு மருத்துவருமான டாக்டர் எஸ்.சவுந்தரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடித்து மகிழ்வது கொண்டாட்டத்தின் ஒரு பகுதி ஆகும். பட்டாசு விபத்துகளில் அதிகம் காயம் ஏற்படுவது கைகளில்தான். அடுத்து, கண்களில் வெடித் துகள்கள் பட்டு காயம் ஏற்படுகிறது. அவை இமைப் பகுதிகள், விழிப்படலம், கண் நரம்புகளை பாதிக்கின்றன.
உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் பார்வை இழப்பு, பார்வைத் திறன் குறைபாடு, விழித்திரை பாதிப்பு ஆகியவை ஏற்படும். கண்களில் தீப்பொறியோ வெடிச் சிதறல்களோ படும்பட்சத்தில் கண்களை அழுத்தித் தேய்க்கவோ, கசக்கவோ கூடாது. காயம் இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும் கூடாது.
அதேபோல், வலி நிவாரண மருந்துகளை சுயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தூய்மையான நீரில் கண்களைத் திறந்த நிலையில் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அந்த நிலையிலேயே மென்மையாக கழுவ வேண்டும். தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்ல வேண்டும். மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் சுயமாக மருந்துகளோ, களிம்புகளோ தடவக்கூடாது. பட்டாசு காயங்களில் பார்வை இழப்பு ஏற்படுதற்கு அலட்சியமே 50 சதவீதம்.
கான்டாக்ட் லென்ஸ் பொருத்தியிருப்பவர்கள், அதனை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்கும்போது இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பட்டாசுப் புகையும், வெப்பமும் லென்ஸ் பாதிப்பதுடன், கண்ணையும் பாதிக்கும். பட்டாசுகளை வெடிக்கும்போது கண்களை முழுமையாக மறைக்கும் கண்ணாடிகளை அணிந்து கொள்வது அவசியம். 3 மீட்டர் தொலைவில் இருந்துதான் பட்டாசு வெடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.