சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து சென்னையில் தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவ.12-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீயணைப்புத் துறை சார்பில் சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
கோயம்பேடு தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், கோயம்பேடு பேருந்து நிலையம், மார்க்கெட்டில் பொதுமக்களிடம் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தி.நகரில் உள்ள சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தி.நகர் தீயணைப்புத் துறையினர் சார்பிலும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் கீழ்ப்பாக்கம் தீயணைப்புத் துறையினர் சார்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பட்டாசுகளை எப்படி வெடிப்பது எவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருப்பதுதீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பன குறித்து செய்து காண்பித்தனர். சென்னையின் பல்வேறு இடங்களில் தீயணைப்புத் துறைசார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.