ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஒரிஜினல் வீடியோ, ஜாரா படேல் என்ற இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிந்த வீடியோ என்றும் அதில் ராஷ்மிகாவின் முகத்தை மட்டும் இணைத்து இந்த வீடியோ 'டீப் ஃபேக்' தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது என்றும் பின்னர் தெரியவந்தது.
இதுபோன்ற போலி வீடியோக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை தேவை பலர் கூறி வருகின்றனர். நடிகர் அமிதாப்பச்சன், இதற்குச் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
ராஷ்மிகா வெளியிட்ட பதிவில், “தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது பயமாக இருக்கிறது. இதனால் பலர் பாதிக்கப்படும் முன் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார். நடிகர் நாகசைதன்யா உட்பட பலர் ராஷ்மிகாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை மிருணாள் தாக்குர் வெளியிட்டுள்ள பதிவில், “இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் வெட்கப்படவேண்டும். அவர்களுக்கு மனசாட்சிஇல்லை என்பதையே இதுகாட்டுகிறது. இந்தப் பிரச்சினைபற்றி நம்மில் பலர் பேசாமல் இருக்கும் நேரத்தில் நீங்கள் பேசியதற்கு நன்றி ராஷ்மிகா. ஒவ்வொரு நாளும் நடிகைகளின், மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் உலா வருகின்றன. சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? நாங்கள் நடிகைகளாக ‘லைம்லைட்’டில் இருக்கலாம். ஆனால் நாம் எல்லோரும் மனிதர்கள்தான்” என்று தெரிவித்துள்ளார்.