சென்னை: புதுப்பேட்டையில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் செயற்கையான வாகன நெரிசல் ஏற்படுத்தப்படுகிறது. இப்பகுதிவியாபாரிகளுக்கு தொந்தரவு இல்லாமல் சாலையை அகலப்படுத்துவதுடன், நடைபாதையை மீட்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை அண்ணா சாலையையும், பூந்தமல்லி சாலையையும் இணைக்கும் முக்கிய இணைப்பு வழித்தடமாக புதுப்பேட்டையில் உள்ள ஆதித்தனார் சாலை விளங்குகிறது. அண்ணா சாலையில் இருந்து புரசைவாக்கம், பெரம்பூர், பாரிமுனை, மாதவரம், திருவொற்றியூர் போன்ற வடசென்னை பகுதிகளுக்கு செல்லவும், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், எழும்பூர் நீதிமன்றம் செல்வதற்கும், புதுப்பேட்டை பகுதியில் உள்ள போலீஸாரின் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு இவ்வழித்தடமே பிரதானமாக உள்ளது.
புதுப்பேட்டையில் உள்ள ஆதித்தனார் சாலையின் இருபுறங்களிலும் பழைய இரும்பு மற்றும் புதிய வாகனஉதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகம் உள்ளன. இருசக்கரவாகனங்கள் முதல் கனரக வாகனங்களுக்கான போல்டு நட்டுகள் முதல் இன்ஜின் பாகங்கள் வரை அனைத்துப் பொருட்களும் இங்கு சில்லறை விலையிலும், மொத்த விலையிலும் விற்கப்படுவதால் தமிழகத்துக்கே இந்த புதுப்பேட்டை முக்கிய வணிக பகுதியாக விளங்குகிறது. இதனால் எந்நேரமும் இந்த சாலை நெரிசல் மிகுந்ததாகவே காணப்படுகிறது.
60 அடியிலிருந்து 20 அடிக்கு... - ஆனால் இங்குள்ள கடை வியாபாரிகள் தங்களது வாகனங்களையும், தங்களது கடைகளுக்கு வரும் இருசக்கர வாகனங்களையும், விற்பனைக்காக வைத்துள்ள வாகனங்களையும் சாலையின் நடைபாதையை மறைத்தும், சாலையோரத்தை ஆக்கிரமித்தும் நிறுத்துகின்றனர். இதனால் 60 அடி சாலையாக உள்ள இந்த சாலை 20 அடியாக குறுகிவிட்டது. இதனால் மாநகர பேருந்து போன்ற கனரக வாகனங்களோ அல்லதுகார்களோ இவ்வழித்தடத்தில் சென்றால்மற்ற வாகனங்கள் அவற்றின் பின்னாலேயே ஊர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்பகுதியில் உள்ள தெருக்களிலும் நடந்து செல்வதற்கு மட்டுமே இடம் உள்ளது. அந்தளவுக்கு வாகனங்களின் நெருக்கடியால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.