சென்னை: மழை பாதிப்புக்குள்ளாகும் மக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி, மின்சாரம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், மனித உயிரிழப்பு, கால்நடை இறப்பு மற்றும் சேதமடைந்த குடிசை, வீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.வடகிழக்கு பருவமழை அக்.21 அன்று தொடங்கியதிலிருந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில், அக்.1 முதல் நவ.13ம் தேதி வரை 221.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 17 விழுக்காடு குறைவு ஆகும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் நவ.13 முடிய, 8 மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவும், 7 மாவட்டங்களில் இயல்பான மழைப்பொழிவும், 23 மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவும், ஏற்பட்டுள்ளது.இன்று (நவ.14) காலை 8.30 மணி வரை 35 மாவட்டங்களில் 13.25 மி.மீ. மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 11.3 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.30 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. தமிழக முதல்வர் கடந்த 19.09.2023 அன்று ஆய்வுக் கூட்டம் நடத்தி, வடகிழக்குப் பருவமழைக்கென மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.