தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தமாக 71 மருத்துவ கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதில் அரசு மருத்துவ கல்லூரிகளில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் என மொத்தம் 6000 அரசு மருத்துவ இடங்கள் உள்ளன.
சில மாதங்களுக்கு முன்னர் தேசிய மருத்துவ ஆணையமானது புதிய கட்டுப்பாடுகளை மருத்துவ கல்லூரிகளுக்கு விதித்தது. அதன்படி மாநிலத்தின் மக்கள் தொகையை கணக்கிட்டு பத்து லட்சத்திற்கு 100 மருத்துவ இடங்கள் மட்டுமே ஒதுக்க வேண்டும் என அறிவுறுத்தியது. அவ்வாறு கணக்கிட்டால் தமிழக மக்கள் தொகையின் கணக்கிட்டீன்படி தமிழகத்திற்கு குறைவான மருத்துவ இடங்களே கிடைக்கும் நிலை உருவானது.
இதனால் தமிழகத்தில் மருத்துவ இடங்கள் குறையும் நிலை மற்றும் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க முடியாத சூழலும் உருவானது. இதற்கிடையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனை கல்லூரி, திருப்பூர் மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் புதிய மாணவர் சேர்க்கையை தேசிய மருத்துவ ஆணையம் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி நிறுத்தியது. மருத்துவ இடங்கள் மற்றும் மேற்கண்ட கல்லூரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியது.
மருத்துவ இடங்கள் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதி வந்தனர். இந்த நிலையில் தான் தற்போது தேசிய மருத்துவ ஆணையம் புதிய அறிவிப்பை தெரிவித்துள்ளது. அதன் படி, வரும் 2025ஆம் ஆண்டு வரை ‘புதிய மருத்துவ இடஒதுக்கீடு கட்டுப்பாடு’ஆனது அமலுக்கு வராது என்றும் 2025க்கு பின்னர் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.