மேலும், பாலவாயல் பகுதியில் சோத்துப்பாக்கம் சாலை, சார்-பதிவாளர் அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். நல்லூர் பகுதியில், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை சூழ்ந்துள்ள மழைநீர் முழுமையாக வடியாததால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாயினர். ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், பெரியபாளையம் அடுத்த ஆரணி அருகே உள்ள புதுப்பாளையம் மற்றும் கொசவன்பேட்டை இடையே ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால், அங்கு போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால், புதுப்பாளையம், மங்களம், காரணி, எருக்குவாய், நெல்வாய், முக்கரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக ஆரணி மற்றும் பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதான சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. திருவேற்காடு நகராட்சி, அயப்பாக்கம் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டும், குழியுமாக இருந்த சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறியுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.