அக்.7 சம்பவத்தின் சிற்பி.. நெருங்கிட்டோம்.. கொல்லாமல் விடமாட்டோம்.. ஹமாஸ் நிறுவனருக்கு ஸ்கெட்ச் போட்ட இஸ்ரேல்!

அக்.7 சம்பவத்தின் சிற்பி.. நெருங்கிட்டோம்.. கொல்லாமல் விடமாட்டோம்.. ஹமாஸ் நிறுவனருக்கு ஸ்கெட்ச் போட்ட இஸ்ரேல்!
By: TeamParivu Posted On: December 07, 2023 View: 37

அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் படைகள் நடத்திய தாக்குதலின் சிற்பி என இஸ்ரேலால் அழைக்கப்படும் ஹமாஸ் நிறுவனர்களில் ஒருவரான யஹ்யா சின்வாரின் வீட்டின் நெருங்கி விட்டதாகவும் அவரை கொல்லாமல் விடமாட்டோம் என்றும் இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.


கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் அதிரடி தாக்குதல் நடத்தியது. சுமார் 30 நிமிடங்களில் 7000க்கும் அதிகமான ராக்கெட்டுகளை வீசிய ஹமாஸ் பாராசூட்டுகள் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தரை வழித் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1200 பேர் இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

இதையடுத்து இஸ்ரேல் அரசு ஹமாஸ் போர் அறிவித்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போரில் இரு தரப்பிலும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் சிற்பி என அழைக்கப்படும் யஹ்யா சின்வாரை கண்டுபிடித்து கொலை செய்வோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,

சின்வாரின் வீட்டை இஸ்ரேலியப் படைகள் சுற்றி வளைத்துள்ளதாகவும் , அவரைக் கண்டுபிடிக்கும் வரை இன்னும் சிறிது நேரம் ஆகும் என்றும் தெரிவித்தார் . மேலும் நேற்று இரவு தங்கள் படைகள் காசா பகுதியில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று தான் அனுமதி வழங்கியதாகவும், தற்போது சின்வாரின் வீட்டை தனது படையினர் சுற்றி வளைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மேலும் சின்வாரின் வீடு அவரது கோட்டை அல்ல என்றும் அவர் தப்பி ஓட முடியும், இருப்பினும் சிறிது நேரத்தில் அவரை கண்டுபிடித்துவிடுவோம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதனிடையே சின்வார் சுரங்கத்தில் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள இஸ்ரேல் பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி, சின்வார் சுரங்கப்பாதையில் பதுங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த தகவலை தான் விரிவாக கூற விரும்பவில்லை என்றும், ஊடகங்களில் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி பேச இது இடம் இல்லை என்றும் கூறினார். மேலும் சின்வாரைக் கண்டுபிடித்து அவரைக் கொல்வதே எங்கள் வேலை என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். யஹ்யா சின்வார் கான் யூனிஸ் அகதிகள் முகாமில் பிறந்தவர். 61 வயதான இவர் 2017 ஆம் ஆண்டு காஸாவில் ஹமாஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..