சென்னை: சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரும் டிச.26-ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம், கட்சியின் சட்ட திட்ட விதிகள்19 (vii) மற்றும் 25(ii)-ன்படி, வருகின்ற டிச.26, செவ்வாய் கிழமை காலை 10.35 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கட்சியின் அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.