சென்னை: சென்னையில் கடந்த 4-ம் தேதி 24 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மழையால் சென்னையே வெள்ளக்காடானது. இதனால், பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். இந்நிலையில், மக்களின் நலன் கருதி, நவீனதொழில்நுட்ப கேமராக்கள் மூலம்பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சென்னை போக்குவரத்து போலீஸார் ரத்து செய்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 3-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை, வெவ்வேறு சந்திப்புகளில் நிறுவப்பட்டஅதிநவீன கேமராக்கள் (ஏஎன்பிஆர்)மூலம் மொத்தம் 6,670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புயல் பாதிப்புகளை கருத்தில்கொண்டு, இந்த ஒருமுறை மட்டும் மேற்படி தேதிகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டும் ரத்து செய்யப்படும். இவ்வாறு போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.