தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
By: TeamParivu Posted On: December 10, 2023 View: 50

சென்னை: தமிழகத்தில் நாளை தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகளை, புதன்கிழமை (டிச.13) அன்று தொடங்க பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "‘மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி, தமிழக அரசால் பள்ளிகளுக்கு டிச.4 முதல் டிச.9 வரை விடுமுறை அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் அறிவுரைகளின்படி, ‘மிக்ஜாம்’ புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, வரும் டிச.11 (திங்கட்கிழமை) அன்று பள்ளி திறக்கும் நாளில் நல்ல கற்றல் சூழலை உருவாக்கும் விதமாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இவற்றைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த 17 அதிகாரிகள் 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இப்பணிகளுக்காக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயும், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 40 லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப்பை போன்ற பொருட்களை வழங்க நாளை (டிச.11) மாணவர்களின் தேவைகளைக் கண்டறிந்து, செவ்வாய்க்கிழமை (டிச.12) அன்று பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே, டிச.11 அன்று அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில், புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்ற நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை திங்கள்கிழமை (டிச.11) தொடங்கவிருக்கும் தேர்வுகளை புதன்கிழமை (டிச.13) அன்று தொடங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறையால் அரையாண்டுத் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை வெளியிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..