சென்னை: "தமிழ்க்கவிதை மரபில் புதுப்பாதை அமைத்துப் புரட்சி நிகழ்த்திய மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவர் தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் ஆற்றிய பெரும்பணிகளைப் போற்றி வணங்குவோம்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே! வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே!" எனத் தமிழை வாழ்த்தி, தமிழ்க்கவிதை மரபில் புதுப்பாதை அமைத்துப் புரட்சி நிகழ்த்திய மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவர் தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் ஆற்றிய பெரும்பணிகளைப் போற்றி வணங்குவோம்! வாழிய முண்டாசுக் கவிஞனின் புகழ் வையம் உள்ளவரை! என்று பதிவிட்டுள்ளார்...
முன்னதாக, தமிழக அரசு சார்பில் மகாகவி பாரதியாரின் 142-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு தமிழக மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் த.வேலு அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பாரதியாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.