சென்னை: சென்னையில் மாநகராட்சி சார்பில் கடந்த 5 நாட்களில் 35 ஆயிரம் டன்குப்பைகள் அகற்றப்பட்டன. குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்த வெளிமாவட்ட தொழிலாளர்கள் இன்று விடைபெற்று செல்கின்றனர். மிக்ஜாம் புயல் பாதிப்பிலிருந்து சென்னை மாநகரம் மீண்டு வந்துவிட்ட நிலையில், 9 நாட்களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. மாநகரின் சில பள்ளிகள் தவிர, பெரும்பாலான பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள் மற்றும் கழிப்பறைகளை ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் மொத்தம் உள்ள 420 மாநகராட்சி பள்ளிகளில் 4 பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் கழிவறை தூய்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையிலான 5 நாட்களில் 35 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. வெளி மாவட்டங்களில் இருந்து, சென்னையில் தூய்மைப்பணி மேற்கொள்ள வந்திருந்த சுமார் 2 ஆயிரத்து 300 தூய்மைப் பணியாளர்கள், தங்கள் பணிகளை நிறைவு செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் 12-ம் தேதி (இன்று) சென்னையில் இருந்து விடைபெறுகின்றனர். சென்னையில் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கு தோல் நோய், சுவாச பிரச்சினைகள் மற்றும் எலி காய்ச்சல் உள்ளிட்ட அனைத்துக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.