சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு அரபிக்கடல், அதை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 12, 13, 14-ம்தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 15, 16, 17-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 24 டிகிரி முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 6 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.