சென்னை: தனியார் மருத்துவமனையில் 3 வார சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வீடு திரும்பினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டதால் கடந்த மாதம் 18-ம் தேதி சென்னைமியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) சேர்க்கப்பட்ட அவருக்கு சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
இத்தகைய சூழலில், விஜயகாந்த் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, ஆக்சிஜன் உதவியுடன் நுரையீரல் நிபுணர்கள் அவரை கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், நேற்று மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்.
இதற்கிடையே, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், “நான் பூரண நலம் பெற வேண்டி வாழ்த்திய திரை உலகைச் சேர்ந்த அனைவருக்கும், அரசியல் கட்சி பிரமுகர் களுக்கும், தேமுதிக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.