மதுரை: நீதிமன்றம் உத்தரவிட்டும் கோயில் கொடை விழா நடத்தப்படாதது தொடர்பான அவமதிப்பு வழக்கில் அறநிலையத் துறை இணை ஆணையர், காவல் ஆய்வாளர் ஆகியோர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் இட்டேரி தாமரைச்செல்வி நடுத்தெருவைச் சேர்ந்த இ.சங்கரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு: எங்கள் ஊரில் செல்வவிநாயகர் கோயில், நல்லாச்சியம்மன் கோயில், தளவாய் மாடசாமி கோயில், உச்சிமகாளியம்மன் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்கள் சைவ பிள்ளைமார் சமூக மக்களின் நலனுக்காக எங்கள் மூதாதையர்களால் கட்டப்பட்டவை. கோயில் நிர்வாகத்தை 40 மனை சைவ பிள்ளைமார் நலச்சங்கம் நிர்வாகித்து வருகிறது. இந்தக் கோயில் கொடை விழாவில் சாமிகளுக்கு சைவ படையல் வைப்பது வழக்கம். இந்த பழக்கம் 70 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கத்தில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மற்றொரு சமூகத்தினர் கோயில் அருகே ஆடு, கோழிகளை பலியிட்டு வருகின்றனர். இது பாரம்பரிய வழிபாட்டு முறைக்கு எதிரானது.