மஞ்சூர்: கேரள மாநிலம் வயநாடு திருநெல்லி பகுதியில் உள்ள மளிகைக் கடைக்குள் கடந்த 14-ம் தேதி இரவு புகுந்த 2 மாவோயிஸ்டுகள், உணவுப் பொருட்களை துப்பாக்கி முனையில் பறித்துச் சென்றனர்.
இதையடுத்து தண்டர்போல்ட் போலீஸார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை- நீலகிரி எல்லையில் உள்ள முள்ளி சோதனைச் சாவடியில் 2 ஷிப்டுகளாக 7 போலீஸார் மற்றும் வனத்துறையினர் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது, வாகன ஓட்டுநர்களின் தகவல்கள், ஆதார் அட்டை, வாகன எண், செல்போன் எண் ஆகியவற்றை குறித்துக் கொண்ட பின்னரே வாகனத்தை நகருக்குள் அனுமதிக்கின்றனர். இதேபோல் செல்லும் வழியில் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று வனத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தில் இருந்து முள்ளி சோதனைச் சாவடி வழியாக நீலகிரி வரும் வாகனங்களுக்கு போலீஸார் அனுமதி மறுத்து கேரளாவுக்கு திருப்பி அனுப்பினர்.