அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் வரும் திங்கள்கிழமைக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு கூட்டத்துக்கான நோட்டீஸ் குறித்து சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் பதில் தருமாறு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.
அப்போது எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்; நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய கூடுதல் மனுக்களை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கு தடை கோரிய இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 2 கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பி.எஸ், ஒட்டுமொத்த கட்சியும் தனக்கு எதிராக உள்ளதாக கருதி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதிமுகவை பொறுத்தவரை அனைத்துமே பொதுக்குழுதான்; பொதுக்குழுதான் உச்ச பட்ச அதிகாரம் படைத்தது.
பிரச்னைகள் குறித்து ஒ.பி.எஸ் பொதுக்குழுவில் தான் விவாதித்திருக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்துக்கு வந்திருக்க கூடாது என கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்; சென்னை: ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலியாகிவிட்டதாக ஈபிஎஸ் தரப்பு வைத்த வாதம் தவறானது. 2021 டிசம்பர் செயற்குழு தீர்மானத்தின்படி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒட்டுமொத்தமாக உட்கட்சி தேர்தல் நடந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி மட்டும் காலி என எப்படி கூற முடியும். பொதுக்குழு ஒப்புதல் என்பது சம்பிரதாயம்தான். பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வருவதற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை.
அவ்வாறு இருக்கையில் பதவிகள் எப்படி காலியாகும் என பன்னீர் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். இறந்தபோது என்ன ஆனது என விளக்கவில்லை. தலைவர்கள் உயிருடன் இல்லாத போதுதான் பதவி காலி என கருத முடியும். என வாதிட்டார். எடப்பாடி தரப்பு 3-வது வழக்கறிஞர்; பல உண்மைகளை மறைத்து பன்னீர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதிமுக பொதுக்குழு குறித்து பன்னீர்செல்வம் எதுவும் மனுவில் தெரிவிக்கவில்லை என வாதிட்டார். ஓ.பன்னிர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் வரும் திங்கள்கிழமைக்கு தீர்ப்பு வழங்கப்படும் எனவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
Tags:
#அதிமுக
# பொதுக்குழு கூட்டம்
# ஓபிஎஸ்