சென்னை: எண்ணூர் எண்ணெய் கசிவால் மீன், பறவைகள், தாவரங்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக மீன்வளத் துறை, வனத் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மணலி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய பெட்ரோலிய எண்ணெய், பக்கிங்ஹாம் கால்வாயில் கலந்து, கொசஸ்தலையாறு மற்றும் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் பரவியது. வெள்ளம் பாய்ந்த மீனவ குப்பங்களிலும் எண்ணெய் கழிவுகள் படிந்தன. மீன்பிடி படகுகள், வலைகளும் பாழாயின. இதனால் பொதுமக்களும், மீனவர்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர்.
இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் உயர்மட்ட குழுவும் அமைத்துள்ளது. இந்த விசாரணையில் சிபிசிஎல் நிறுவனம் எண்ணெய்யைவெளியேற்றியதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் சிபிசிஎல் நிறுவனம் எண்ணெய் கழிவுகளை அகற்றி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்குஅமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஎல் நிறுவனம் சார்பில் ஆஜாரான வழக்கறிஞர் அப்துல் சலீம் கூறியதாவது: எண்ணெய் கழிவு பரவலை தடுக்க 1,430 மீட்டர் நீளத்துக்கு பூம் மிதவைகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 ஸ்கிம்மர் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.