திருநெல்வேலி/தூத்துக்குடி: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏராளமான கிராமங்கள் 3-வது நாளாக நேற்றும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மின்சாரம்,போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் ராணுவம், பேரிடர்மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
குமரிக் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, குமரி,தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி இரவு அதிகனமழை பெய்யத் தொடங்கியது. 17-ம்தேதி முழுவதும் பெய்த அதிகனமழை 18-ம் தேதி காலை 8 மணிவரை நீடித்தது. இதனால் 4 மாவட்டங்களும் மழை நீரால் சூழப்பட்டு, கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா அணை மற்றும் ராமநதி, குண்டாறு, கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு அதிக நீர்வரத்து இருந்தது. எனினும், அபாயத்தை தவிர்க்கும் வகையில், கூடுதலாக வந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, உச்சநீர்மட்டத்தில் இருந்து 5 அடிக்கு குறைவாகவே நீர்மட்டம் நிலைநிறுத்தப்பட்டது.
தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், கரையோரப் பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. நான்குமாவட்டங்களிலும் உள்ள குளங்கள், கண்மாய்கள் 100 சதவீதம் நிரம்பி, மறுகால் பாய்கின்றன. இதன் காரணமாக கிராமங்கள், வயல்கள், தோப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. நேற்று தென் மாவட்டங்களில் முழுமையாக மழை ஓய்ந்து, வெயில் அடித்தது. எனினும், ஆறுகளில் தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.