இதில் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த பல்லவி பிரஷாந்த் என்பவர் வெற்றி பெற்றார். அவருக்கு ரூ.35 லட்சம் பரிசு தொகை, ரூ.15 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் மற்றும் ஒரு சொகுசு கார் போன்றவை பரிசாக வழங்கப்பட்டன. அமர்தீப் சவுத்ரி என்பவர் 2-ம் இடம் பெற்றார். மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இரவு, அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இருந்து அனைவரும் வெளியே வந்தனர்.
அப்போது, கோப்பையை வென்ற பல்லவி பிரஷாந்த் ரசிகர்களுக்கும், 2-ம் இடம் பிடித்த அமர்தீப் சவுத்ரியின் ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது, பல்லவி பிரஷாந்தின் ஊர்க்காரர்கள் மற்றும் ரசிகர்கள் வெறித்தனமாக அவர்களின் கைகளில் கிடைத்த பொருட்களால், அங்கிருந்த கார் கண்ணாடிகளை உடைத்தனர். ஆட்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புக்கு வந்திருந்த 6 போலீஸ் ஜீப்புகளின் கண்ணாடிகளையும், அரசு பஸ்ஸையும் அடித்து நொறுக்கினர்.
இதுதொடர்பாக, பஞ்சகுட்டா போலீஸார் பல்லவி பிரஷாந்த், அவரது சகோதரர் மஹாவீர் உட்பட நண்பர்கள் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மொத்தம் 16 பேர் இவ்வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் நேற்று காலை ஹைதராபாத் நாம்பல்லி நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், அனைவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. அதன்படி அனைவரும் ஹைதராபாத் சஞ்சல்கூடா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, நேற்று பல்லவி பிரஷாந்த் மற்றும் அவரது சகோதரர் மஹாவீர் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கும்படி அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக நேற்று விசாரணை நடந்தது. தீர்ப்பு இன்று வெளியாகுமென தெரியவந்துள்ளது.