சென்னை: எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கு ரூ.8 கோடியே 68 லட்சத்து 70 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சிபிசிஎல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மணலி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய பெட்ரோலிய எண்ணெய் கழிவால் எண்ணூர் முகத்துவார பகுதிகளில் எண்ணெய் படலம்ஏற்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. வீடுகளில்படிந்த எண்ணெய் கழிவுகளால்பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு,அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பறவைகள் இறக்கவில்லை: எண்ணூர் பகுதியில் 20-ம் தேதி வரை 1 லட்சத்து 5 ஆயிரத்து 280லிட்டர் எண்ணெய் கழிவு, 392 டன்எண்ணெய் படிந்த கழிவு பொருட்கள் அகற்றப்பட்டு, சிபிசிஎல் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. தார் உருளை கழிவுகள் பழவேற்காடு பகுதியில் காணப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. . அங்கு நடத்தப்பட்ட ஆய்வில், கடற்கரை மற்றும்கோரைகுப்பம் மற்றும் கூனாங்குப்பம் மீனவர் வசிக்கும் பகுதியில் தார் உருளை கழிவு காணப்பட்டது. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனத்துறை சிறப்பு குழு எண்ணூர், அடையார், கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் நடத்திய ஆய்வில், எங்கும் பறவைகள் இறப்பு தென்படவில்லை.
ஒருசிலபறவைகளின் சிறகுகளில் எண்ணெய் படிவுகள் காணப்பட்டன. தமிழக சுற்றுச்சூழல் துறை, சென்னை ஐஐடி ஆகியவை கசிந்தஎண்ணெய் கழிவின் அளவு, கால்வாய்கள், பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலையாறு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றன. கோவாவில் உள்ள தேசிய கடலியல் நிறுவனம், எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உயிரி முறையில் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.