தமிழகத்தில் காலரா பாதிப்பு இல்லை...மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...!

தமிழகத்தில் காலரா பாதிப்பு இல்லை...மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...!
By: TeamParivu Posted On: July 10, 2022 View: 123

காரைக்கால் மாவட்டத்தில் காலாரா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கு மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் காலரா பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இன்று தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, முனிசிபல் காலனியில் நடைபெற்ற முகாமினை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்து 471 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மேலும் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 93.10 % மக்களும் 2-ம் தவணை தடுப்பூசி 87.10 சதவீத மக்களும் செலுத்தியுள்ளனர்.

அதோடுமல்லாமல் 12-14 வயது மற்றும் 15-17 வயது உடையவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி தன்னிறைவு பெற்ற மாவட்டமாக தஞ்சாவூர் விளங்குகிறது என்று கூறிய அமைச்சர், தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு 143 பேர் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி 94.68 சதவீத பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசி 85.47 சதவீத பேரும் செலுத்தியுள்ளதாக கூறினார். 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களில் 95% பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 5 சதவீதம் பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி பயன்பாட்டினால், கொரோனா உயிரிழப்பு அதிக அளவு இல்லை என்றும் தற்போது தமிழகத்தில் 21,513 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர் என்றும் அவர் தனது பேட்டியில் கூறினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பினால் அதிக அளவில் மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கும் நிலை ஏற்படும் போது மட்டுமே, கடும் கட்டுப்பாடுகள் கொடுக்கப்படும் என்று அவர் கூறினார். உலகில் பல்வேறு நாடுகளில் பரவி வரும் பிஏ4, பிஏ5 எனும் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் சில மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று அவர் கூறினார். 

மேலும் பேசிய அவர், சுகாதாரத்துறையில் செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 4308 காலி பணியிடங்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்றார். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் காலரா பாதிப்பு இருந்தது தெரிய வந்தவுடன் அதனை ஒட்டி உள்ள திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் காலரா பாதிப்பு இல்லை என்று அவர் தெரிவித்தார்.

Tags:
#தமிழகம்  # காலாரா  # அமைச்சர் மா.சுப்பிரமணியன்  # சுகாதாரத்துறை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..