சென்னை: டிஎன்பிஎஸ்சி குருப் 4 பணிகளுக்கான 2-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குருப்-4 பணிகளில் அடங்கிய இளநிலை உதவியாளர், வரி தண்டலர், பண்டக காப்பாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்கான 2-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜனவரி 3-ம் தேதி சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தெரிவுப்பட்டியல், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அழைப்பாணை தனியாக தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
உறுதியளிக்க இயலாது: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு, காலியிடங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டு, பணிநியமனம் வழங்கப்படும் என்பதற்கு உறுதி அளிக்க இயலாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்