புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை: செயல் அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு...!

புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை: செயல் அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு...!
By: TeamParivu Posted On: July 11, 2022 View: 82

கோயில் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்டு, கோயில் பெயரில் பட்டா பெற செயல் அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், அனைத்து சார்நிலை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: கோயில் புறம்போக்கு நிலங்களின் மீது அரசின் உரிமையினை உறுதிப்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் புறம்போக்கு நிலங்கள் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். திருவிழா மற்றும் மத நிகழ்வுகளுக்கான தற்காலிக பயன்பாடுகள் தவிர இதர அனைத்தும் ஆக்கிரமிப்பாகவே கருதப்பட வேண்டும். கோயில் புறம்போக்காக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் கோயிலின் உபயோகத்திற்கு உள்ள நிலப்பரப்பு தவிர எஞ்சிய நிலங்களை உழவடை அனுபவத்திற்கும், கோயில் வருவாயை பெருக்கும் வகையில் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கும் பயன்படுத்தலாம்.

கோயில் புறம்போக்காக வகைப்படுத்தப்பட்ட நிலங்களை தீர்வை ஏற்பட்ட தரிசாக மறுவகைப்படுத்தி, கோயில் பெயரில் இலவசமாக பட்டா வழங்கி அந்நிலங்களை கோயில் வருவாய் பெருக்கும் நோக்கங்களுக்கு பயன்படுத்தலாம். கோயில் பயன்பாட்டிற்கு போக, உபரியாக உள்ள புறம்போக்கு நிலங்களை மறுவகைப்படுத்தி பட்டா பெறுவதற்கு முன்னதாக செயல் அலுவலர்கள், நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெற வேண்டும். உழவடை செய்திட தகுதியுள்ள நிலங்கள், பயிர் உழவடை செய்யும் பயன்பாட்டிற்காகவும், உழவடை செய்ய தகுதியற்ற நிலங்கள், கோயில் நலன் சார்ந்த இதர நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த வேண்டும். எந்த நோக்கத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ, அந்த நோக்கத்திற்கு மட்டுமே அந்நிலம் பயன்படுத்த வேண்டும்.

பசலி ஆண்டில் ஆக்கிரமிப்புகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், ஜமாபந்தி அலுவலர் முன்பு மனு தாக்கல் செய்து அகற்றப்பட வேண்டும். கோயில் திருவிழா பயன்பாட்டிற்காக தற்காலிக அனுபவங்கள் தவிர இதர அனைத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை ஒவ்வொரு பசலி முடிவிலும் மாவட்ட ஆட்சி தலைவரால் சீராய்வு செய்யப்பட வேண்டும். எனவே, கோயில் புறம்போக்கு நிலங்களில் வருவாய் நிலை ஆணைக்கு முரணாக தனிநபர் பெயரில் பட்டா வழங்கப்பட்டிருப்பின், தனியார் பட்டா மாற்றங்களை ரத்து செய்து கோயில் பெயரில் பட்டா பெற மாவட்ட வருவாய் அலுவலர் முன்பு மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யுமாறும், வருவாய்த்துறை அலுவலர்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அனைத்து சார்நிலை அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

கோயில் பயன்பாடு போக உபரியாக உள்ள புறம்போக்கு நிலங்களை தீர்வை ஏற்பட்ட தரிசாக மறுவகைப்படுத்தி இறைவன், இறைவி பெயரில் இலவசமாக பட்டா பெறுவதற்கான முன்மொழிவுகளை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் புறம்போக்கு நிலங்களில் மாவட்ட நிர்வாகம் மூலமாகவோ இதர துறைகள் மூலமாகவோ கட்டுமானங்கள் கட்டப்பட்டிருப்பின், உரிய துறைகளின் உயர் அலுவலர்களை அணுகி, கட்டுமானத்தில் உள்ள நிலத்தை விற்பனை, நீண்டகால குத்தகை என்ற வகையில் முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கான விவர அறிக்கையை சார்நிலை அலுவலர்களிடம் இருந்து பெற்று தொகுத்து 15 நாட்களுக்குள் அனுப்ப அனைத்து இணை ஆணையர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:
#கோயில்  # புறம்போக்கு நிலங்கள்  # பட்டா  # அறநிலையத்துறை  # ஆணையர் குமரகுருபரன்  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..