ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இரு ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம் தேரா கி கலி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த புதன்கிழமை பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அங்கு நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் மறுநாளும் நீடித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலையில் ஒரு லாரி மற்றும் ஒரு ஜீப்பில் கூடுதல் வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ரஜவுரி எல்லையை ஒட்டிய பூஞ்ச் மாவட்டத்தின் தாத்யார் மோர் என்ற இடத்தில் இந்த வாகனங்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 4 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 வீரர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டு தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெறுகிறது.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரஜவுரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் கடந்த 2021 அக்டோபர் முதல் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு 34 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் நேற்று முன்தினம் வரை இது 20 ஆக உள்ளது. அடர்ந்த வனப்பகுதி மற்றும் சவாலான நிலப்பகுதியை கொண்ட இப்பிராந்தியத்தில் ராணுவம் தொடர் தாக்குதல்களை எதிர்கொள்கிறது.