புதுடெல்லி: கோவிட் வைரஸின் புதிய மாறுபாடான ஜேஎன்.1 தொற்றால் பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வர மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் படி மாநில அரசுகள் தயாராக இருந்து வரும் நிலையில், இந்தியாவில் கூடுதல் பூஸ்டர் தடுப்பூசிப் போட அறிவுறுத்தப்படவில்லை என்று மூத்த சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியா SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பின் (INSACOG) தலைவர் என்.கே. அரோரா தி இந்துவிடம் கூறுகையில், "கோவிட் மாறுபாடு அதிகரித்ததும், ஜேஎன்.1 மாறுபாடு கண்டறியப்பட்டுள்ள நிலையில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த கூடுதலாக நான்காவது தடுப்பூசி அவசியமில்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் அதே வயதிலுள்ள ஆபத்தான நோயுள்ள இதுவரை ஒரு தடுப்பூசி கூட போடாதவர்கள் மூன்றாவது தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். சாதாரண மக்களுக்கு நான்காவது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் முன்னெச்சரிக்கைகளை அறிவிப்போம், மக்கள் பீதியடையத் தேவையில்லை. புதிய திரிபுகள், துணை மாறுபாடுகள் உலகம் முழுவதும் பதிவாகி வருகின்றன.
அதிர்ஷ்டவசமாக இந்த ஒமிக்ரான் மாறுபாடு தீவிர நோய்களுடன் தொடர்புடையாதாகவோ, மருத்துவமனையில் சேரும் அளவுக்கு தீவிரமாகவோ இல்லை. காய்ச்சல், மூக்கில் இருந்து சளி ஒழுகுதல், இருமல், சிலநேரங்களில் வயிற்றுப்போக்கு, உடல் வலி ஆகிய அறிகுறிகளைக் கொண்ட ஜேஎன்.1 துணைமாறுபாடு ஒரு வாரத்தில் குணமாகி விடும். மத்திய அரசு ஏற்கனவே சோதனைகளை அதிகப்படுத்தவும், தொற்று அறியப்பட்டால் கூடுதல் ஆய்வுக்கு தெரிவிக்கவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன". இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் 656 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,742 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் ஒருவர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,33,333 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது.