தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஆனால், வாழ்வையே புரட்டிபோட்ட பெருமழை பாதிப்புகளில் இருந்து மக்களால் மட்டும் மீள முடியவில்லை. தூத்துக்குடி கிராமங்களின் தற்போதைய நிலையைக் காட்டும் காட்சிகள் இங்கே > உருக்குலைந்த தூத்துக்குடி, நெல்லை கிராமங்கள் - கள நிலவர புகைப்படத் தொகுப்பு
பெரு மழை வெள்ளத்தால் தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி கடந்த 5 நாட்களாக நடைபெற்றது. ராணுவம், விமானப் படை, கடலோர காவல் படை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படை, காவல் துறையில் பயிற்சி பெற்ற மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மழை வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர்.
வெள்ளம் ஓரளவு வடிந்துவிட்டாலும் தாமிரபரணி கரையோர கிராமங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் நெஞ்சை அதிரச் செய்கின்றன. பெரும்பாலான கிராமங்களுக்கு செல்லும் சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன. தாமிரபரணி பாசன பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல்,வாழை பயிர்கள் சேதமடைந்துவிட்டன.