சென்னை: சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கல்வி, பணி, தொழில் காரணமாக வசிக்கும் பலரும்பண்டிகை, தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையும் நேற்று முதல் விடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருப்பவர்களும் நேற்று சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
குறிப்பாக, சென்னையில் இருந்து சொந்த வாகனங்களில் செல்வோர் நேற்று காலை முதலே பயணத்தை தொடங்கியதால் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
இதற்கிடையே, சென்னையில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளில் முன்பதிவு இருக்கைகள் அனைத்தும் ஏற்கெனவே நிரம்பியதால், உடனடியாக பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்ய முடியாமல் தவித்தனர்.
பண்டிகை நாட்கள் என்பதால், ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் வழக்கம்போல உயர்த்தப்பட்டது. இதனால் பயணிகள் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது: நேரடியாக திருநெல்வேலி செல்லும் விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்ய முடியவில்லை. மதுரை சென்றுஅங்கிருந்து மாறிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. திடீரென பயணத்துக்கு திட்டமிடுபவர்கள் இதுபோன்ற இக்கட்டான நிலையில் தவிக்கின்றனர்.