சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகேயுள்ள சுரங்கப் பாதையில் நீரூற்று ஏற்பட்டு தேங்கும் தண்ணீ்ர மற்றும் ஆங்காங்கே காணப்படும் குழிகளால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இதை விரைவாக சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"மிக்ஜாம்" புயல் தாக்கத்தால் பெய்த கனமழையில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக் காடாக மாறியது. இந்த மழையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நுங்கம் பாக்கமும் ஒன்றாகும். நுங்கம்பாக்கம் பிரதான சாலை, நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதிகள், அகஸ்திஸ்வரர் கோயில் மாடவீதி பகுதி உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக மாறி, பொது மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். தற்போது,பல்வேறு இடங்களில் மழை நீர் வடிந்துவிட்டது.
அதே நேரம், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப் பாதையில் நீர் ஊற்று ஏற்பட்டு தண்ணீர் தேங்குவதால், மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி சாலை - நெல்சன் மாணிக்கம் சாலை இடையே இணைப்பை ஏற்படுத்தும் பாதையாக இந்த சுரங்கப் பாதை இருக்கிறது. இது, நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக தினசரி பல்லாயிரக் கணக்கான வாகனங்கள் செல்கின்றன.காலை, மாலை வேளைகளில் நெரிசல் மிகுந்த நேரங்களில் ( பீக் அவர்ஸில் ) இந்த சுரங்கப் பாதையில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் இருக்கும். அதனால், இந்த சுரங்கப் பாதை எப்போதுமே பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், இந்த சுரங்கப் பாதையில் கடந்த ஒரு வாரமாக நீர் ஊற்று ஏற்பட்டு, தண்ணீர் தேங்கி வருகிறது. மேலும், சுரங்கப் பாதை சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், நெல்சன் மாணிக்கம் சாலை - நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி இடையே இருமார்க்கமாக இந்த சுரங்கப் பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.