சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையில் 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பைக் ரேஸ், மது போதையில் வாகனங்கள் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று இரவு முதல் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொள்ள வருகை தருவார்கள் என்பதால், இன்று முதல் சென்னையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீஸாருக்கு உதவியாக ஊர் காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி, இன்று இரவு முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் திங்கள் கிழமை ( டிச.25 ) வரை சென்னையில் உள்ள சுமார் 350 தேவாலயங்களில் சுழற்சி முறையில் போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.