சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முழுமையாக சீல் வைக்கப்பட்டது.
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழு கூடுவதற்கு முன் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அதிமுக அலுவலகத்திற்கு முழுமையாக சீல் வைக்கப்பட்டது.
அதிமுக தலைமை அலுவலகத்தின் உள் அறைகளுக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிரதான வெளிக்கதவையும் பூட்டி வருவத்துறையினர் சீல் வைத்தனர். இதனால் அதிமுக அலுவலகத்தின் உள்ளே உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வருவாய்த்துறை சீல் வைத்ததை அடுத்து அதிமுக அலுவலகம் காவல்துறை கட்டுப்பாட்டில் வந்தது. முன்னதாக , அதிமுக அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி - பன்னீர் ஆதரவாளர்கள் மீது ராயப்பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. அடையாளம் தெரியாத நபர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முழுமையாக சீல் வைக்கப்பட்டிருக்கிறது.
Tags:
#சென்னை
# தலைமை அலுவலகம்
# சீல்