கோவை: இயற்கை நமக்கு அளித்த மிகப்பெரிய கொடை மழை. சராசரியாக பெய்யும் மழையில்40 சதவீதம் நிலத்தின் மீது ஓடி கடலில்கலப்பதாகவும், 35 சதவீதம் வெயிலில் ஆவியாவதாகவும், 10 சதவீதம் மண்ணின் ஈரப்பதத்துக்கு உதவுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் தென்மேற்கு (ஜூன் -செப்டம்பர்) மற்றும் வடகிழக்கு (அக்டோபர் - டிசம்பர்) ஆகிய பருவமழைக் காலங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்கிறது. நடப்பு மாத தொடக்கத்தில் சென்னையில் மிக்ஜாம் புயலால், கனமழை பெய்து, வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. சென்னை மட்டுமின்றி அதையொட்டிய திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களும் கடுமையாகபாதிக்கப்பட்டன. அதேபோல், சில நாட்களுக்கு முன்னர் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதுபோன்ற கனமழை அரசு நிர்வாகத்துக்கு விடப்படும் ஒரு முன்னெச்சரிக்கையாகும்.
ஓடைகள், நீர்நிலைகளுக்கு செல்லும் வாய்க்கால்கள் ஆகியவற்றை முறையாக பராமரித்து கழிவுகளை அகற்றி, தூர்வாரி மழை நீர் தடையின்றி செல்ல ஏதுவாக வைத்திருக்க வேண்டும் என்பதை மேற்குறிப்பிட்ட பேரிடர்கள் உணர்த்துகின்றன. கோவை மாநகரில் 6,500-க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் சாலைகள், மழைநீர் வடிகால்கள் மற்றும் சாக்கடைக் கால்வாய்கள் செல்கின்றன. சிங்காநல்லூர், வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், முத்தண்ணன் குளம், செல்வாம்பதி, குறிச்சிக்குளம் உள்ளிட்ட 9 குளங்கள் மாநகராட்சி எல்லைக்குள் உள்ளன. சங்கனூர் ஓடை, சிற்றோடைகள், ராஜவாய்க்கால், நொய்யல் வழித்தட வாய்க்கால் மற்றும் சிறு சிறு வாய்க்கால்கள் என ஏராளமான நீர்நிலை வழித்தடங்கள் மாநகரில் செல்கின்றன.