சேலம்: சேலம் கோரிமேடு ஏடிசி நகரை, அழகாபுரத்துடன் இணைக்கும் சாலையில், ஓடையின் குறுக்கே உள்ள தரைப்பாலம் பழுதடைந்த நிலையில் இருப்பதுடன், மழைக்காலத்தில் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்படுவதும் என பல ஆண்டுகளாக பிரச்சினை நீடிப்பதால், இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். சேலத்தில் மக்கள் தொகை நெருக்கம் அதிகமான பகுதிகளில் ஒன்றாக உள்ளது கோரிமேடு. இங்கு மகளிர் அரசு கலைக்கல்லூரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன.
இதனால், சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தினமும் கோரிமேடு பகுதிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோரிமேடு பகுதியுடன் இணைந்த ஏடிசி நகர், கோரிமேடு- அழகாபுரம் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில், கோரிமேடு- அழகாபுரம் சாலையின் குறுக்கே செல்லும் ஓடை மீது, ஏடிசி நகரில் பல ஆண்டு களுக்கு முன்னர் கட்டப்பட்ட தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் சேதமடைந்துள்ள நிலையில், மழைக்காலத்தில் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் மூழ்கிவிடுவதும் அடிக்கடி நிகழ்கிறது. விரைவில், பாலம் முழுவதுமாக சேதமடைந்து, போக்குவரத்து துண்டிக்கப்படும் ஆபத்து நிலவுகிறது.