செஞ்சுரியன்: இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் இன்று தொடங்கவுள்ளது. 31 ஆண்டுகளாக இந்திய அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் கிரிக்கெட் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அந்தக் குறையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி போக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தென் ஆப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் போட்டி,டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி கண்டது.இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கவுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த முதலாவது டெஸ்ட் இன்று பிற்பகல் 1.30மணிக்கு தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் தினத்துக்குமறுநாள் நடைபெறும் போட்டி என்பதால் இது ‘பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி என்றே அழைக்கப்படுகிறது.