“கறுப்பா இருந்தா ரஜினின்னு நினைப்பா, உன்ன யார் உள்ள விட்டது” என்று விரட்டினார் ஓர் இயக்குநர். “இவருக்கெல்லாம் ஜோடியா நடிச்சா.. என் மார்க்கெட் காலி” என்று பின்வாங்கினார் வளர்ந்து கொண்டிருந்த ஒரு கதாநாயகி. “பணம் கொண்டா, ஹீரோ சான்ஸ் தர்றேன்” என்றார் ஒரு தயாரிப்பாளர். இப்படி எவ்வளவோ அவமானங்கள், கேலி, கிண்டல்கள். எல்லாவற்றையும் எதிர்கொண்டு உயரங்களைத் தொட்டவர் ‘கேப்டன்’ விஜயகாந்த்.
அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் ‘நாராயணசாமி’. அது அவருடைய தாத்தாவின் பெயர். தனக்குத் தானே ‘விஜய் ராஜ்’ என்று பெயர் சூட்டிக்கொண்டார். அதுவே மதுரையில் அவரது நண்பர்கள் மத்தியில் ‘விஜி’ என்று பிரபலமானது. அவரை இப்போதும் ‘நாராயணா..’ என்றழைப்பது அவருடைய அக்கா டாக்டர் விஜயலட்சுமி மட்டும்தான். மதுரை மாகாளிபட்டியில் அப்பாவின் அரிசி ஆலையைக் கவனித்துக்கொண்டார். பகலில் ரைஸ் மில், மாலையில் நண்பர்களுடன் அரட்டை, இரவில் சினிமா என்று ஜாலியாக வலம் வந்த இளைஞர். அவரது நண்பர்கள் குழுவுக்கு ‘இரவு ராஜாக்கள்’ என்கிற தனிப் பட்டம் உண்டு.
படத்திலிருந்து நீக்கம்: அப்பாவுக்குப் பிடித்த தலைவர் காமராஜர். மகனுக்கு எம்.ஜி.ஆர். அதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர். மன்ற உறுப்பினரும்கூட. ‘விஜயராஜ் & கோஷ்டி’ மாலை ஆகிவிட்டால், மதுரை சேனாஸ் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் ஒன்றுகூடி அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள். அது மதுரையின் பெரிய விநியோகஸ்தர் முகம்மது மஸூரின் அலுவலகம். இவர்தான் விஜய்ராஜுக்கு சினிமா வாய்ப்பினைப் பெற்று தந்தவர். விஜயகாந்தின் முதல் படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்பார்கள். அது அவரது 6வது படம். முதல் படம் ‘இனிக்கும் இளமை.’
ஆனால் அதற்கும் முன்பு அவர், ரஜினிக்கு தம்பியாக ‘என் கேள்விக்கு என்ன பதில்’ என்கிற படத்தில் தான் முதலில் 101 ரூபாய் முன்பணம் வாங்கிக்கொண்டு நடித்தார். ‘அட யாருப்பா இந்த ஆள்! நல்லா நடிக்கிறானே..!’ என்று செட்டில் பேச்சுக் கிளம்பியது. மூன்று நாள் மட்டுமே நடித்திருந்த நிலையில் படத்திலிருந்து நீக்கப்பட்டார். கொதித்த விஜய்ராஜ், நேரே அந்தப் பட நிறுவனத்தின் அலுவலகத்துக்குச் சென்று தயாரிப்பாளரிடம் நியாயம் கேட்டு சண்டை போட்டார். “உங்கள் முன்னாலேயே சினிமாவில் ஜெயித்துக் காட்டுகிறேன்” என சவால் விட்டுத் திரும்பினார்.