மகாகவி பாரதி மறைந்து ஒருநூற்றாண்டு முடிந்துவிட்டது.ஆனால், அவரது சொற்களோதினமும் புதிதாகப் பிறக்கின்றன; அன்றையநாளின் பொருத்தப்பாட்டுக்கு ஏற்பப் புதியபொருளில் ஒளிர்கின்றன - என்பதாக இக்கட்டுரையைத் தொடங்க நான் திட்டமிட்டிருக்கவில்லை. மாறாக, 2023இல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைப் பற்றிய சிறுஒப்பீட்டுடன்தான் தொடங்கியிருந்தேன். 2022ஆம் ஆண்டின் ‘கற்றதும் பெற்றதும்’ தொடரில், அந்த ஆண்டின் தொழில்நுட்ப மேம்பாடு குறித்த ஒரு கட்டுரையில் மட்டுமே செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) ‘சாத்தியங்கள்’ பற்றிப் பேசப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு (2023) ‘கற்றதும் பெற்றதும்’ தொடரில் வெளியான கட்டுரைகளில் பாதிக்கும் மேல், பல்வேறு துறைகளில் ஏஐ கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள்-விளைவுகளை அலசியிருக்கின்றன.
இதை எழுதிய நொடியில்தான், ‘கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம் / அற்ப மாயைகளோ? - உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?’ என்கிற பாரதியின் வரிகள் நினைவில் மின்னலாக வெட்டின. ‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே’ எனத் தொடங்கும் இப்பாடலுக்கு, ‘உலகத்தை நோக்கி வினவுதல்’ எனத் தலைப்பிட்டிருக்கிறார் பாரதி (‘பாடல் திரட்டு’ என்று பாரதியார் பெயர் சூட்டிய ஒரு திரட்டில் 29 பாடல்கள் இடம்பெற்றிருந்தன; அதில் ஒன்று இப்பாடல். பாரதியார் காலமான பிறகு பாரதியாரின் மனைவி ‘பாரதி ஆச்ரமம்’ என்கிற பெயரில் தொடங்கி நடத்திய பதிப்பகத்தின் வழியாகச் ‘சுதேச கீதங்கள்’ முதற்பாகம் (1922) என்ற தலைப்பில் வெளியிட்ட தொகுப்பில் இந்தப் பாடல் 90ஆவதாக இணைந்துள்ளது (ப.1065, தமிழ்ப் பல்கலைப் பதிப்பு); தகவல்: ஆய்வாளர் பழ.அதியமான்).