திருநெல்வேலியில் வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையிலுள்ள ஆற்றுப்பாலம் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள நிலையில் அப்பாலத்தில் தற்போது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இப்பாலத்தை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுக்கிறார்கள். திருநெல்வேலி, பாளையங்கோட்டையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலம் அமைந்துள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், கோவில்பட்டி, மதுரை உள்ளிட்ட வடபகுதியிலுள்ள மாவட்டங்களுக்கும், முக்கிய இடங்களுக்கும் பயணிகள் வாகனங்கள், சரக்கு லாரிகள் செல்லவும் வசதியாக வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தையொட்டி அமைக்கப்பட்ட சிறுபாலத்தின் வழியாக பாதாள சாக்கடை குழாய் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன.