திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி வெள்ள பாதிப்புகளுக்கு சட்டவிரோத செங்கல் சூளைகளும் முக்கிய காரணமாக இருந்ததாகவும், கட்டுக்கடங்காமல் மணல் சூறையாடப்பட்டதால் கரைகள் எளிதில் உடைந்து பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் இயற்கை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு சொந்தமாக, தமிழகத்துக்கு உள்ளேயே பாயும் ஒரே நதி என்ற பெருமை மிக்க தாமிரபரணி ஆறு தென்மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்துக்கு படியளக்கும் அட்சயபாத்திரமாகவும் விளங்கி வருகிறது. கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதிகனமழையால் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பலகோடி மதிப்பில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு வட்டாரங்களிலும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணியில் அதிகளவில் வெள்ளம் கரைபுரண்டது பாதிப்புக்கு காரணமாக சொல்லப்பட்டது. அதன் கரைகள் ஆங்காங்கே உடைப்பெடுத்து ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. ஆற்றுப் புறம்போக்கிலும், ஆற்றை ஆக்கிரமித்தும் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளும் இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.